Monday, January 07, 2019

Tradition in Modernity - பழமையும் புதுமையும் -


 ( என் கணவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையில் தமிழாக்கம் இது )

பழையன மாறவும்; 
புதியன தோன்றவும்!

குறள் போன்ற வரிகள்
ஒரு கவிஞனின் குரலிசைகள்!

மெல்ல மெல்ல சருகாகும் பழைய இலைகள்
அங்கெல்லாம் தோன்றும் புதிய புதிய துளிர்கள்!

புதிய மொட்டுக்கள்; பசுமைக் கிளைகள்
நாளைய வைரக் கொப்புக்கள்!

வயதான கிளைகள், சுள்ளிகள் அகலும்.
இளமைக் காம்புகள் அங்கெல்லாம் தோன்றும்....

பாரிய அடிமரம் ஓங்கி உயர்ந்திட
உச்சியில் பச்சிலை பந்தல் விரித்திட....

(அதனை) கதிரவன் ஒளிக்கதிர் வாரி அனைத்திட
(இவ்வாறு) பெருகும் மரமதன் திரண்ட வேர்கள்!

பற்றிப் பிடித்து மண்ணில் தாவி வேர் விரிய, 
ஓங்கி வளர்ந்த ஒய்யார மரமது;
எம்மை நோக்கி, 
பாரிங்கே,
பழசும் புதுசும் குலவிடும் யுக்தியை!
எனும்.

பார்! அங்கெலாம் இளமையின் கோலம்
அது,
பழமையும் புதுமையும் காட்டிடும் ஜாலம்.

உச்சிப் பந்தலை மொட்டையடித்தால்
மெல்லச் செத்திடும் அடி மரம் அங்கே! - அதுபோல்
ஓங்கி நிற்கும் நவீனம் அழிய, மடிந்திடும் பழமை!

பழமைத் தூண்களில் படர்வதே நவீன பந்தல்.
கருவறை பழையது; புதியதோ அதன் சிசு!

பழையன கழிதலும் புதியன புகுதலும்
ஒரு வாட்போரின் விளைவல்ல;
இரண்டும் கொஞ்சிக் குலவிடும்
இளமைக் கலவியின் பேறே அன்றோ!

நவீனம் என்பது தானே தோன்றிய
இளமைக் கொடியே அல்ல;

பழமை என்பதும் புதுமையைப் படைத்து 
என்றும் அதனடி வாழும் யுக்தியைக் கொண்டதே!


( 21/ 21. 7.2007 அன்று ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற  நிகழ்ச்சிக்காக மொழிபெயர்த்த கவிதை )


No comments:

Post a Comment