Thursday, January 31, 2019

எங்கள் வேர்

இன்று எமது வாரிசுகள் ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள்.பெரும்பாலும் இவர்கள் தமது பாரம்பரியத்தை அறியாதவர்கள். பிறநாட்டில் நாம் அந் நாட்டு பிரஜைகளாக வாழ்ந்த போதும் அந் நாட்டவரோ எம்மை வந்தேறு குடிகளாகவே கருதுகிறார்கள். இதனால் எமது இளம் சிறார்கள் முற்றுமுழுதாக இந்த நாட்டவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்துடன் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஆமாம், சுதந்திரம் என்பது மனோரீதியாக இவர்கள் தாம் எந்த நாட்டவருடனும் சரிநிகர் சமானமாக நிற்கக் கூடியவர்கள் எனக் கருதுவதை உள்ளடக்கி நிற்கிறது. பல இளம் தலைமுறையினர் இந்தக் கறுப்புப் பெற்றோருக்கு பிறந்து நாம் அல்லல் பட வேண்டி உள்ளதே எனப் புளுங்கத்தான் செய்கிறார்கள். காரணம் நம் பாரம்பரியம், நாடு யாவும் அடிமைப்பட்ட பூர்வீகம் உடையது என்ற அவர்களின் மனதில் ஆழ வேரூன்றிப் போயுள்ள எண்ணமே. தொழில்நுட்ப விஞ்ஞான அறிவில் முன்னேறியது மேற்கு நாடுகள். எம்மவரோ எதையும் அறியாதவர் என அவர்கள் ஆழமாக நம்புகிறார்கள்.

இந்தப் பின்னணியில் அவர்களுக்கு நமது சரியான பூர்வீகத்தை அறியத் தருவது நமது கடமையாகும். இதன் மூலம் அவர்கள் தமது பூர்வீகம் சிறந்த பின்னணியில் அமைதிருப்பதை அறியும் போது தாழ்வு மனப்பாண்மையை விடுத்து சிறந்த ஒரு பூர்வீகத்தின் வாரிசுகள் என்ற பெருமிதத்துடன் வாழ முடியும். இதை அறிந்து இவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டியது நமது கடமையாகும்.

இன்று எமது பண்பாட்டின் சின்னமாக ஓங்கி நிற்பது கோயிலும் கோயில் கோபுரங்களும். இவை வழிபாட்டுத் தலங்களாக மட்டும் அன்று நிலவவில்லை. இந்தக் கோயில்கள் நாடக அரங்காகப்; பல கலைகளின் இருப்பிடமாக அமைந்திருந்தது. ஏன் வங்கிகளாகக் கூட அவை இயங்கின. கடன் கொடுக்கவும் வட்டி வாங்கவும் கூடச் செய்தன. மொத்தத்தில் அரச பரிபாலனமே கோயிலை மையமாகக் கொண்டு இயங்கியது எனலாம்.

இந்த உயர்ந்த கோயில்களை கட்டுவதற்கான அறிவும் அவர்களிடம் இருந்தது. இதன் அறிவுக் கருவூலம்’ சிற்பசாஸ்திரம்’ என அறியப்பட்டது. இத்தகைய கட்டிடங்களைக் கட்டி எழுப்ப வேண்டிய கணித அறிவும் அவர்களிடம் இருந்தது. கணிதத்தின் பகுதிகளான Geometry, Algebra, Square roots, Fraction  யாவற்றையும் அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள்.

புகழ் பெற்ற இந்தியக் கணித மேதை ஆரியப்பட்டர் வானியல் நிபுணராகவும் இருந்தார். கிரகங்களின் வழியாக தோன்றும் நாளை வெகு துல்லியமாகக் கணித்துக் கூறினார். இவரது காலம் கி.பி. 476 ஆகும். இது கலிலியோவிற்கு முற்பட்ட காலம். ஆரியபட்டருக்கு பல காலங்களுக்கு முன்பே இந்தியக் கணிதத்தில் சைபர் - அது தான் பூச்சியம் வந்து விட்டது. இந்தச் சைபரைக் கணிதத்தில் புகுத்தியவர் இந்தியரே.

பொறியியல் துறையில் நாடு மிகவும் முன்னேறி இருந்தது. துருப்பிடிக்காத உலோகங்களின் சேர்க்கை அது தான் Steel கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே பாவனைக்கு வந்து விட்டிருந்தது. டெல்லிக்கு அருகாமையில் அமைந்துள்ள குதும்மினார் ( Qutub Minar )கோபுரத்துக்கு அருகாமையில் காணப்படும் உலோகத் தூண் கி.பி. 4ம் நூற்றாண்டுக் காலத்தயது. இன்றும் அது சிறிதும் துருப்பிடிக்காது  காணப்படுகிறது. இந்த உலோகத்தூண் இன்றும் விஞ்ஞானிகளை வியக்க வைக்கிறது.


சுஸ்ருத சமிஹித்த ( Susruta Samhita ) என்னும் நூல் ஆயுள் வேத வைத்திய முறைகளை மட்டும் குறிப்பிடவில்லை. பலவகையான சத்திர சிகிச்சை முறைகளும் இதிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மருந்துகளின் தன்மை விரிவாக ஆராயப்பட்டுள்ளது. விஷங்களும் அவற்றின் குணங்களும் அவற்றைக் கையாளும் வழிமுறைகளும் அவற்றில் விளக்கப் பட்டுள்ளன. காது, தொண்டை, மூக்கு பற்றி விரிவாக ஆரய்வதுடன் பல வைத்தியங்களைப் பற்றிய தனித்தனியான பிரிவுகளும் இதில் உள்ளன.

பதஞ்சலியின் யோக சூத்திரம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது. இது மனித மனதைச் சரியாக வழிநடத்த வழிவகைகளைக் கூறுகிறது. முறையான சுவாசம், உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் ஊடாக  மனிதனை உன்னத நிலைக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பயிற்சி மூலம் நிரூபித்தார்கள். அதுவே இன்று உலகப் புகழ் பெற்ற யோகா அப்பியாசம்,( Yoga)  தியானம் ( Meditation)  ஆக விளங்குகிறது. இதன் அருமை பெருமைகளை மேலைத்தேயத்தவர்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

இத்தனை இருந்தும் பிற்பட்ட காலத்தில் நாம் ஏன் முன்னிலைக்கு வரவில்லை என்பது ஆராய வேண்டிய ஒன்றே. உடல் மெய்யானது என்னும் பொழுது தான் உடல் பற்றியும் அதனை மேன்மைப்படுத்துவது பற்றியும் ஆராய்ச்சிகள் எழும். இடைக்காலத்திலே இந்த உடல் பொய்யானது என்ற தத்துவம் பரவத்தொடங்கியது. இந்த உலகே மாயம் என்னும் பொழுது இந்த மாயையை விடுத்து அப்பால் தத்துவத்திலும் அதை ஆராய்வதிலும் எம்மவர் நேரத்தை வீணடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

அறிவு என்பது பலவிஷயங்களில் பொதிந்துள்ள உண்மையைத் தேடுவதற்கான ஆய்வு. அந்த ஆய்வுகளின் முடிவே சமூக முன்னேற்றத்திற்கு உதவுவது. நாம் வாழும் உலகே மாயமானது; உடல் என்பது பொய்யானது என்ற எண்ணம் வரும் பொழுது நம்மால் பார்த்து உணர முடியாத ஒன்றில் மக்கள் மனதைச் செலுத்தியதால் அறிவு வளர்ச்சிக்குப் பதில் அறிவு எம்மை விட்டு நழுவி விட்டது. வாழாமல் தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டோம்.

( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .............திகதி ஒலிபரப்பாகியது.)

No comments:

Post a Comment