Sunday, January 06, 2019

ஒளவை

யாவரும் பிறக்கிறார்கள்; இறக்கிறார்கள். ஆனால் காலத்தால் அழியாதவர்கள் ஒரு சிலரே. தமக்கென வாழ்ந்தவர் எல்லாம் மாண்டார். ஆனால் பிறர்க்கென வாழ்ந்தோரோ காலத்தால் அழியாதவர். என்றும் மக்களின் மனதில் நிற்பவர்.

பல்லக்கும் பரிவாரத்துடனும் வாழ்ந்த மன்னனின் புகழ் பாடி பரிசில் பெற்ற பாவலர் பலர். அனால் ஒளவையாரோ வருங்கால சமுதாயமான குழந்தைகளுக்கு அரிச்சுவடி மூலம் அறிவுரை கூறினார். அன்று ‘அறம் செய்ய விரும்பு’ எனத் தொடங்கி ஒளவையின் அறிவுரையை மனனம் பண்ணினோம். வளர்ந்ததும் அதன் பொருள் பொருள் புரிந்தோம். அதன் அர்த்தம் அதன் படி ஒழுகு என்பதே.

அன்றய சமுதாய அமைப்பில் பெண்கள் கல்வி பெற்றவர்கள் அல்ல. அதற்கு விதிவிலக்காக இருந்தார் இந்த அம்மையார். அரசர்களுக்கும் அறிஞர்களுக்கும் அறிவுரை கூறினார். போர்களை நிறுத்தத் தூது போனார். அவர் செய்தவை யாவற்றையும் பார்த்தால் இன்றய 21ம் நூற்றாண்டு பெண்கள் தோன்றுகிறார்களல்லவா?

நம்முன் ஒளவைப்பாட்டி என்று ஒரு கிழ உருவமே ஒளவையார் எனப் படைக்கப்பட்டது. காலம் காலமாக எமது கலைஞர்கள் அவரை இப்படித் தான் உருவகித்து வருகிறார்கள் .பாடப்புத்தகங்கள்,டீ கே.எஸ். சகோதரர்களுடய ஒளவை நாடகத்திலே டீ.கே.சண்முகம் ஒரு கிழவியான தோற்றத்திலே வந்தார். அது மட்டுமா ஒளவையார் படத்தில் ஒளவையார் ஒரு கிழவியாகவே கே.பி. சுந்தராம்பாள் மூலமாகத் தோன்றினார்.

ஆனால் தமிழ் நாட்டில் ஒளவையாருக்காகப் பல கோயில்கள் ஸ்தாபிக்கப்படுள்ளன. அவை எதிலும் அவர் வயோதிபத் தோற்றத்தில் இல்லை. பகுத பாண்டி ஒளவை அம்மன் கோயிலிலே அவரின் திருவுருவம் ஓர் இளநங்கையாகவே படைக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் ஒளவை அம்மன் கோயில் என்கிறார்கள்.

நாஞ்சில் நாட்டில் நாஞ்சில் பொருணன் என்ற மன்னனால் அமைக்கப்பட்ட கோயிலிலும் ஒளவை பாட்டியாகக் காட்சி கொடுக்கவில்லை. அங்கு ஒளவையின் திருவுருவம் ஒரு நெல்லி மரத்தடியில் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஸ்தலத்தை நெல்லியடிஒளவை அம்மன் என அழைக்கிறார்கள். ஒளவையாருக்கும் நெல்லிக்காய்க்கும் இருந்த தொடர்பாலோ என்னவோ நெல்லி மரத்தடியில் இத் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தான் ஒளவையார் தனது பூதவுடலை விட்டு புகழுடம்பு எய்தினார் என்கிறார்கள்.

ஒளவையார் ஒரு திருமணம் நடத்தி வைத்தாராம். அதற்கு சேர, சோழ, பாண்டிய மூவரசர்களையும் அழைத்திருந்தாராம். இங்கு அந்த மூன்று மண்டபங்களின் இட்டிபாடுகள் கானப்படுகின்றன. இந்த இடத்தை முப்பந்தல் என அழைக்கிறார்கள். இங்கு ஒளையாரின் திருவுருவம் அவர் வீரக்கோல் ஏந்தி இருப்பதாக அமைக்கப்படுள்ளது. இது ஊன்றுகோல் அல்ல. இங்கும் அவர் ஓர் இள நங்கையாகவே படைக்கப்படுள்ளார்.

திருவள்ளுவரும் ஒளவையாரும் ஓர் சமூக சீர்திருத்த வாதிகளே. தாம் வாழ்ந்த சமுதாயத்தில் இருந்த குறைபாடுகளை அவர்கள் திருத்த முயன்றார்கள். இலகு மொழியிலே மக்கள் புரிந்து கொண்டு செயற்பட கருத்துக்களை வழங்கினார்கள்.

ஒளவை வாழ்ந்த கால கட்டத்தில் தாசி பரம்பரையைச் சேர்ந்த பெண்களே கல்வி அறிவில் சிறந்து விளங்கினார்கள். கல்வி கற்கும் உரிமையும் அவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. இவர்களே அரசனது நம்பிக்கையையும் பெற்றிருந்தனர். அரசனின் ஆசை நாயகிகளாகவும் இவர்கள் இருந்தனர். இதனாலே இவர் அரசனுக்காகத் தூதும் போய் இருக்கலாம். அதனால் போலும் தமிழ் நாட்டில் இருக்கும் ஒளவையார் சிலைகளும் இள நங்கையாகவே படைக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் வந்தவர்கள் ஒளவையாரை அறிவில் உயர்ந்தவர், மன்னனுக்காகப் பல காரியங்களைச் செய்தவர் என்னும் போது அவர் தாசி பரம்பரையை சேர்ந்த இள நங்கையாகக் காட்டாது; மூதாட்டியாகப் படைக்க முற்பட்டனர்.

அதாவது,  அவர் இளநங்கையாக இருந்த போதும்  பிற்காலத்தோர் தமது கருத்தை நிலை நாட்ட; மேலும் ஒளவையார் ஒரு தாசி என்பதை மறைக்க; அவரை ஒரு மூதாட்டியாகப் படைத்ததாகவே இன்றய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

ஒளவையாரும் இளநங்கையாக வாழ்ந்து வயோதிபராகி இருப்பார். இப்படி எண்ணி இவர்கள் ஒளவையாரை மூதாட்டியாக்கி இருக்கவும் கூடும்.

( இக்கட்டுரை ATBC வானொலியில் 3.2.2005 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. )

No comments:

Post a Comment