Thursday, January 31, 2019

மாகாளியின் அறைகூவல்

இன்றய காலத்திலே  யுனெஸ்கோ நிறுவனம் சிறுவர் தினம் என நவம்பர் 20ம் திகதியை  சிறுவர்களுக்காக ஒதுக்கி உள்ளது. சிலகாலங்களின் முன்பு வரை  பல நாடுகளிலே சிறுவர்களைக் கொண்டு பெரிய தொழில்சாலைகளில் வேலை வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. மற்றும் சிறுவர்களுக்குக் கல்வியறிவு வழங்கப்படாமையும் காணப்பட்டது. குறிப்பிட்ட சிறுவர் தினத்தில் உலக நாடுகள் சிறுவர்கள் நலச் சேவைகள் குறித்த விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களின் மேம்பாடு, அபிவிருத்தி, நலச்சேவைகள் பற்றி அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர இச் சிறுவர்தினப் பிரகடனம் பயனுடயதாக இருக்கிறது.

அதே போன்று பெண்கள் தினமும் உண்டு. மார்ச் மாதம் 8ம் திகதியை சர்வதேச பெண்கள் தினமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தி உள்ளது.. காரணம் இன்றய 21ம் நூற்றாண்டிலும் பெண்கள் சாதாரண மனிதருக்கு வழங்கப்படும் உரிமைகள் அற்றவர்களாக வாழ்கிறார்கள். கல்வியறிவற்றவராகவும் ஆண்களால் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றவர்களாகவும் பலர் வாழ்ந்து வருகின்றனர். வெளியுலகம் கூடத் தெரியாது சமய சம்பிருதாயம் என வீட்டுக்குள்ளே பூட்டி வைக்கப்படும் துன்பமும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.

பாரதியாரோ,

‘ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
யென்றெண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலைகுனிந்தார்’

என்று பாடி இன்று 80 வருடங்களுக்கு மேலாகியும் இன்றும் உலகில் இந்தக் கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளது. பெண்களின் விசேஷ கொண்டாட்டமாகக் கொள்ளப்படும் இந்த நவராத்திரி நாட்களை நாம் ஏன் பெண்கள் தம் நிலையை; திறமையை; பலத்தை உணரவைக்கும் காலமாகக் கொள்ளக் கூடாது?

பாரதி வாக்கில்,

‘ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என உயர்ந்து விட்ட பெண்ணினம்’

என்பதற்கிணங்க தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இருந்து விடாது தன் சக இனத்துக்காகக் குரல் கொடுக்கவும் போராடவும் துணியும் போது தான் இந்த பரந்த உலகில் அல்லலுறும் பெண்களைக் காப்பாற்ற முடியும்.

இந்தச் சமய நூல்கள் கூறுவது மகிஷன் உலகுக்கிழைத்த கொடுமையில் இருந்து மக்களைக் காக்க பார்வதியே மாகாளியாகிறாள் என்பதாகும். கைகளிலே சூலம், சக்கரம், வாள் அம்பு வில்லு என்பன சகிதமான ஆயுத தாரியாக மகிஷனைத் தாக்க அவள் புறப்படுகிறாள். ஒன்பது நாள் நீண்ட யுத்தத்திலே கண்களுக்குப் புலப்படாத அந்த அரக்கனை அவள் கொல்கிறாள்.

பெண் அடிமை என்பதும் வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படாத அரக்கனே. மதம், சம்பிருதாயம், கலாசாரம் என்ற போர்வையிலே பெண்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. தம் இனத்துக்கு இழைக்கப்படும் கொடுமையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு பெண்ணுமே மாகாளியாக வேண்டும்.

புறப்படுங்கள் பெண் இனமே புறப்படுங்கள்!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள் நிகழ்ச்சிக்காக ........திகதி ஒலிபரப்பானது)

No comments:

Post a Comment