Thursday, January 03, 2019

உணவு: மாறுபட்ட பழக்க வழக்கங்கள்

தென் இந்தியர்களும் நாமும் தமிழர்கள் தான். ஆனால் நம் உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுபட்டவை. அவர்கள் Three Course Meal சாப்பிடுவார்கள். அதாவது முதலிலே சாம்பாருடன் சோறு, பின் இரசத்துடன் சோறு, அதன் பின் தயிர் அல்லது மோர் உடன் சோறு.  பாயாசம் இருக்குமானால் பாயாசம் கடசியல்ல. மோர் சாப்பிடு முன் பாயாசம் உண்பது அவர்களது வழமை.

ஒரு முறை கதாசிரியர் அகிலன் வீட்டில் சாப்பாடு. அழைக்கப்பட்ட விருந்தாளி எமது தமிழ் பேராசிரியர். தில்லை நாதன் அவர்கள். Madras University யில் அவர் Postgraduate Degree செய்துகொண்டிருந்த காலம் அது. தமிழ் நாட்டிற்குப் புதிது. அவரது இலையில் சாதம் போட்டு சாம்பார் இடப்பட்டதாம். அவர் அதைச் சாப்பிட்டார். எமது ஊரிலோ இலையில் சாப்பாடு முடியுமுன் விருந்தாளி மேலும் சோறு போடுவார். இங்கோ நீங்கள் சாம்பார் சாதத்தை முற்றாக முடித்தால் தான் இரசத்திற்குச் சோறு போடப்படும். சாம்பாருடம் இரசம் கலக்கப்படாது. தில்லை நாதனோ நம் ஊர் பாணியில் விருந்தாளி போடுவார் எனக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகிறார். திருமதி. அகிலன் விருந்தாளி சாப்பிடாததால் மேலும் இலையில் சாதம் பரிமாறவில்லை.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் எழுத்தாளர். நீர்வை. பொன்னையன். இவர் முதன் முறையாகத் தலைமன்னாரில் கப்பலில் ஏறி இராமேஸ்வரம் வந்தடைந்தார்.. பிரயணக் களைப்பு. உணவகம் ஒன்றில் நுழைந்தவர் 5 தோசை என்று Order கொடுத்தாராம். யாழ்ப்பணக் கடைத் தோசை எல்லாம் அந்தக்காலத்தில் உள்ளங்கையளவு இருந்த காலம் அது.

நானும் எனது கணவரும் கல்கத்தா சென்று ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம்.  கல்கத்தாவில் vegetarian என்றால் அவர்களுக்குத் தெரியாது. அங்கு யாவருமே மீன் சாப்பிடுவார்கள். இந்தியா முழுவதிலும் சைவ உணவு என்பது தெரியாத ஒரு மாநிலம் வங்காளம். இந்தியாவில் இப்படியும் உண்டா என்பார்கள் சிலர்.

எமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கொஞ்சம் கேழுங்களேன். நாம் தங்கி இருந்தது ஒரு பிராமணர் வீட்டில். அங்கு தினம் தினம் மீன் கறி தடல் புடலாகச் சமைப்பார்கள். எனக்கு இது வியப்பாக இருந்தது. ஆனால் மேலும் நான் கூறப்போவது உங்களுக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கும்.

நாங்கள் இந்த நண்பர் குடும்பத்துடன் கல்கத்தாவில் உள்ள புகழ் பெற்ற காளி கோயிலுக்குச் சென்றோம். அந்தக் கோயிலிலே தங்கி இருந்து தான் இராமகிருஷ்ன பரமஹம்சர் போதனைகள் செய்தார் என்பது வரலாறு. கங்கை நதிக்கு அருகாமையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.

நாம் கோயிலிலே போய் பிரார்த்தனை செய்து விட்டு வந்தோம். சம்பிருதாயமாக கங்கை தீர்த்தத்திலே இறங்கி நீரைத் தலையிலே தெளித்து கங்கையை வணங்கினோம். பின் சாவதானமாகச் சாப்பிட அமர்ந்தோம். எமது நண்பரின் மனைவி சாப்பாட்டைத் திறந்து பரிமாறத் தொடங்கினார். என்ன சாப்பாடு தெரியுமா? மீன் பொரியல், மீன் குழம்பு, அவித்த முட்டை என்பன. இதைப் பார்த்த எமக்குத் தூக்கி வாரிப் போட்டது. கங்கைக் கரையில்; கோயில் வாசலில்; இப்படி ஒரு விருந்தா என ஏங்கினோம். உற்ற நண்பர்களாக இருந்ததால் இது பற்றிப் பின்பு பேசினோம். அந்த அம்மையார் சிரித்துக்கொண்டு, ’கங்கை நதி தானே எமக்கு மீனைத் தருகிறது! இது கங்கா தேவி மக்களுக்குக் கொடுக்கும் கொடை’ எனக் கூறினார். 

கல்கத்தாவில் எல்லோரும் மாமிசம் மச்சம் சாப்பிடுவதால் அங்கு அவித்த முட்டை கூடை கூடையாகத் தெருவோரங்களில், பொது இடங்களில் விற்கப்படும். இது பலராலும் வாங்கி உண்ணப்படும் பண்டம். காரணம் இது சுத்தமான Shield உணவு.

கல்கத்தா வழியாகத் தான் ஆங்கிலேயர் முதன் முதலாக இந்தியாவுக்கு வந்தார்கள். அங்கு தான் ஆங்கிலேயரால்  East Indian Company  ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு ஆங்கிலேயரின் நாகரிகமும் முதலில் பரவியது. வங்காளிகள் இதனால் Bread சாப்பிடுவதில் கைதேர்ந்தவர்கள். நெருக்கடி மிகுந்த கல்கத்தா நகரிலே Bread ற்காக ஒரு பெரிய Market உண்டு. அங்கு வித விதமான Bread வகைகள் உண்டு. இச் சந்தை எங்கள் Flamintion Market ஐ விட மூன்று மடங்கு பெரியது. இவர்கள் தேநீர் அருந்தும் போதெல்லாம் கட்டாயமாக Biscuit சாப்பிடுவார்கள். தேநீர் என்பது எப்போதும் Biscuit உடன் தான் வரும். காலையில் அருந்தும் தேநீர் கூட Biscuit உடன் தான் வரும்.

நானும் எனது கணவரும் முதன் முதலாக England க்குப் போயிருந்தோம். எம்மைப் போல புதிதாக வந்த ஓர் இளம் இந்தியக் குடும்பத்துடன் எமக்குப் பழக்கம் இருந்தது. ஒரு நாள் அந்த நண்பருக்கு Apandisit Operation. அதனால் அந்த இளம் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு Hospital க்குப் போனோம். அது ஒரு Christmas நாள். மனைவி நோயாளியான கணவனைப் பார்க்க குழந்தையோடு போய் விட்டார். வரவேற்பரையில் இருந்த Nurse எம்மைப்பார்த்து, Would you like to have Tea or coffee எனக் கேட்டார். நாம் குளிரால் விறைத்துப் போயிருந்ததால் நான், ஆமாம் டீ தரும் படி கேட்டு விட்டேன். எனது கணவரோ எமது ஊர் பாணியில் கேட்க வேண்டாம் என்று விட்டார். வேண்டாம் என்றாலும் எமது நாட்டில் கொடுப்பது வழக்கம். விருந்தாளி வேண்டாம் என்பது தான் நம் ஊர் பண்பு. ஆனால் அங்கு வேண்டாம் என்பதை  யாரும்   பொருட்படுத்துவது கிடையாது.

ஆனால் இங்கோ இவர் வேண்டாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கு எதுவுமே கொடுக்கப்படவில்லை. எனக்கோ ஒரு பெரிய Cake துண்டொன்றும் Biscuit வகையறாக்களுடன் தேநீர் வந்தது. குளிரில் நடுங்கும் கணவரை விட்டுவிட்டு குடிப்பது எனக்குக் கஸ்ரமாக இருந்தது.

அன்றில் இருந்து நாம் இருவரும் என்றுமே யாராவது சாப்பிடக் கேட்டாலோ அல்லது தேநீர் அருந்தக் கேட்டாலோ போலியாக வேண்டாம் என்று கூறுவதை விட்டு விட்டோம்.

அப்படியான அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இருந்தால் அதை எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்களேன்....

(இக் கட்டுரை 19.1.2005 அன்று ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது )

No comments:

Post a Comment