Wednesday, January 16, 2019

மருந்துகளும் மாத்திரைகளும்


’விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு’ என்பது எமது முதுமொழி.

விருந்து எப்படியோ மருந்து என்பது இப்பொழுது மூன்று நாட்களுக்கு அல்ல. 365 நாட்களுக்குமே வேண்டி உள்ளது. இருதயநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்ற சில நோய்களுக்கு 365 நாட்களும் மருந்துகளை அருந்துவதால் தான் அந் நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். இவ்வாறாக நாளாந்தம் மருந்துகளைப் பருகா விட்டால் எப்பொழுதோ பரலோகம் போயிருப்போம்.

இது ஒரு கசப்பான உண்மைதானே?

அண்மையிலே வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தது. செய்தி இது தான். வலிகளுக்கு நிவாரணம் அளிப்பதற்காக கொடுக்கப்பட்ட vioxx என்னும் மருந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற வியாதிகளை வரவழைக்கக் கூடிய பக்கவிளைவுகளைத் தருவதாக கண்டறியப்பட்டது. இதனால் இந்த மருந்து வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டிருக்கிறது. இந்த மருந்தை ஒழுங்காகப் பாவித்த நோயாளிகளிடம் இது திகிலை ஏற்படுத்தி உள்ளது. எனக்கு வலிநிவாரணம் அளிக்கும் மருந்தே எனக்கு யமனாகி விட முடியுமா? மேற்கொண்டு மற்றய மருந்துகள் குறித்த நம்பகத் தன்மை என்ன அவைகளும் மேலதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்தத் தக்கவை தானா என்ற கேள்விகள் எல்லாம் எழத்தான் செய்கின்றன.

அவுஸ்திரேலியாவில் நோய் நிவாரணமாகக் கொடுக்கும் மருந்துகளுக்குப் பொறுப்பானவர்கள் Australia's Therapeutic goods & Administration. பலவகையான நோய் தீர்க்கும் மருந்துகள் முதலிலே பரீட்சார்த்தமாக மிருகங்களுக்குக் கொடுத்து அதன் பின் பல ஆயிரம் மக்களில் பரிசோதித்த பின்பே சந்தப்படுத்தப் படுகிறது.

மருந்து கண்டுபிடித்த நாளில் இருந்து சுமார் 5 வருடத்தால் தான் இதை நோயாளிகளுக்குக் கொடுக்கலாம் என்ற அத்தாட்சிப்பத்திரம் பெற்றுஅதன் பின் தான் அவை சந்தைக்கு வரவேண்டும் என்பது அரச விதி முறை.  இப்படி வரும் மருந்துகளில் பலவருடங்களுக்கு ஒருமுறை ஒன்றோ அல்லது இரண்டோ மருந்துகள் ஆபத்தானவை என நிறுத்தப்படலாம். அதனால் சகல மருந்துகளுமே ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறிவிட முடியாது.

அலோபதி வைத்தியம்; அது தான் சாதாரண பேச்சுவழக்கில் கூறுவதானால் Western Treatment க்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளால் பக்கவிளைவுகள் சிறிது ஏற்படத்தான் செய்யும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதற்காக நான் மருந்து சாப்பிடாமல் இருங்கோ எனச் சொல்ல வரவில்லை. இந்த மருந்துகள் தாம் எம்மை நோயில் இருந்து காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ வைப்பவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மருந்தியல் நிபுணர்கள் கூறுவதைக் கவனிப்போம். நாம் சாதாணமாகத் தலைவலிக்காகப் பாவிக்கும் Aspirin கூட பக்கவிளவற்றது எனக் கூறிவிட முடியாது. மருந்துகள் பாவிக்கும் ஒவ்வொரு நோயாளியும் தனக்குத் தானே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். தேவையற்றுச் சாதாரணமாக மாறக்கூடிய தலைவலி போன்றவற்றிற்கு மருந்தைத் தவிர்க்க முடியுமானால் தவிர்க்கவும். நீங்கள் முன்பு பாவிக்காத மருந்து மாத்திரைகளை முதல் முறையாகப் பாவிக்கத் தொடங்குபவராக இருந்தால் உங்களை நீங்களே சிறிது கவனித்துக் கொள்ள வேண்டும். வழமைக்கு மாறாக மிகக் களைப்பாகவோ அல்லது சமிபாட்டுச் சிக்கல் ஏற்பட்டாலோ அதைக் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். உங்களுக்கு மூச்சுத் திணறலோ அல்லது தோலில் மாறுதல்கள் ஏற்பட்டாலோ உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்.

வைத்தியரிடம் மருந்துச் சீட்டை வாங்கியதும் உடனே எழுந்து வெளியேறி விடாதீர்கள். அந்த மருந்தை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவ்வேளைகளில் சாப்பிட வேண்டும், இதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படும் சாத்தியம் உண்டா போன்ற கேள்விகளை வைத்தியரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் உடல் நலத்திற்கு நீங்களே பொறுப்பாளி. உங்கள் வைத்தியர் இதற்குப் பதிலளிக்காது விட்டால் நீங்கள் தயக்கமில்லாமல் வேறு ஒரு வைத்தியரை அணுகுங்கள். - இவ்வாறு வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உங்களுக்கு மருந்துகளை விற்பனை செய்யும் Chemist இடம் நீங்கள் கேட்டால் அவர்கள் அழகாகவும் பொறுமையாகவும் இம்மருந்துகள் பற்றிய விபரங்களை உங்களுக்குப் புரிய வைப்பார்கள். மருந்தைப் பாவிப்பதற்கு முன் மருந்துடன் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் துண்டுப்பிரசுரத்தை கருத்தூன்றிப் படித்த பின்பே மருந்துகளைப் பாவிக்கத் தொடங்க வேண்டும். மேலும், சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மருந்தைத் தயாரித்த Company யுடன் நீங்கள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய அத்தனை விபரங்களும் பற்றுச் சீட்டிலோ அன்றேல் மருந்துப் பெட்டியுடனோ காணப்படும். அவர்கள் உங்கள் சந்தேகங்களை தீர்ப்பார்கள். அது அவர்களின் கடமையும் கூட.

  மருந்தைக் Chemist இடம் இருந்து வாங்கியதும் நீங்கள் கேட்ட மருந்தைத் தான் அவர்கள் தந்தார்களா என்பதையும் நீங்கள் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். உதாரணத்திற்கு சில மருந்துகள்  கிட்டத்தட்ட ஒரே உச்சரிப்பில் வருவதால் தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. மருந்து தருபவர்களும் மனிதர்கள் தானே! Human error எங்கும் வர வாய்ப்புண்டு. நீங்கள் வேறு ஏதாவது மருந்து மாத்திரை பாவித்து வந்தால் நீங்கள் அதை உங்கள் Doctor இடமும் Chemist இடமும் கூற வேண்டும். சில மருந்துகள் ஒன்றுக்கொன்று முரணான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. எல்லாவற்றுக்கும் மேலாக காலாவதியான மருந்துகளைப் பாவிக்கவே கூடாது.

எம்மில் பலருக்கு மருந்து மாத்திரைகளை தேநீர், கோப்பி, பால், பழரசம், மற்றும் குளிர்பானங்களோடு பருகும் பழக்கம் உண்டு. இவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நீர் ( Water ) ஒன்றுடன் மட்டும் தான் மாத்திரைகளைப் பருக வேண்டும். கோப்பியில் காணப்படும் Caffeine குடலைப் புண்படுத்தக் கூடும். பாலில் காணப்படும் calcium மருந்து உடலால் உறிஞ்சப்படுவதைத் தடுத்து விடும். தோடம்பழம் போன்ற பழரசங்களில் இருக்கும் புளிப்புத் தன்மை சில மருந்துகளுடன் சேரும் போது வயிற்றில் இரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். வேறு சில பழரசங்கள் மருந்தின் தன்மையைக் குறைத்து விடும். மதுரசம் போன்ற குடிவகைகளோவெனில் மருந்தின் தன்மையை முற்றாகக் கெடுத்துவிட வல்லவை.  அதனால் மருந்தை மிகக் கவனத்துடனேயே பாவிக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய் நொடிகள் அற்றவர்கள் நோய் வராமல் பார்த்துக் கொள்வதே உசிதம்.

(  Readers Digest , April, 2005 பத்திரிகையில் ' A Dose of Reality ' என்னும் கட்டுரையில் இருந்து மருந்து மாத்திரைகள் பற்றிய இதன் சாராம்சம் எடுக்கப்பட்டது. முடியுமானால் அன்றேல் மேலதிக விபரங்கள் தேவையானால் April 2005 'Readers Digest’ வாங்கிப் பார்க்கவும். )

( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் .......திகதி ஒலிபரப்பானது. )

2 comments:

  1. இயற்கையுடன் சேர்ந்து செயற்படும் தமிழ் வைத்திய முறை, மூலிகைகள் மூலம் உடல்நலத்தைப் பேணும் சித்த வைத்தியம் என்பதாகும்.

    நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சீரகம், வெந்தயம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், பெருங்காயம், கேழ்வரகு, வரகு, சாமை, பருப்புவகைகள் வகைகள் மற்றும் எமது பாரம்பரிய காய்கறிகள் (முள்ளங்கி, வெண்டைக்காய், பல வகை கீரைகள் மற்றும் தூதுவளை) நோய்களைத் தடுக்கும், எதிர்க்கும் மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டன. இவ்வகையான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது மருந்தை உட்கொள்வதற்கு நிகரானது.

    நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற சொல்வழக்கு நாம் அறிந்ததே. சித்த வைத்தியம் "வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் வாழ்க்கையை நலமுடன் வாழ உதவுகின்றது.

    பின்வரும் சிலேடைப் பாடல் மேலேயுள்ள விடயங்களை உறுதி செய்கின்றது. இதற்கு இரு வகையில் பொருள் கொள்ள முடியும். ஒன்று ஒரு பலசரக்குக் கடையிலுள்ள பொருட்களும் அந்த கடைக்காரச் செட்டியாரும்.

    மற்றக் கருத்து திருவேரகத்தில் உறையும் முருகனிடம் பேரின்பமான மீண்டும் பிறவாவரத்தை இறைஞ்சும் விண்ணப்பம்.

    "வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? மங்காத
    சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே.

    ReplyDelete
  2. வெங்காயம் = நோய் பட்ட உடல்
    சுக்கானால் = உடைபட்டதால்
    வெந்தயத்தால் = வெந்த இதயத்தால்
    ஆவதென்ன.
    இங்கார் சுமந்திருப்பார் = இந்த உடம்பை இங்கு ஆரால் சுமக்க முடியும்
    மங்காத = குறைவில்லாத
    சீரகத்தை = சீரான அகத்தை; சிறந்த உடலை
    தந்தீரேல் = தந்தீர்களானால்
    தேடேன் = வேண்டேன்
    இப் பெருங்காயத்தை = இப் பெரிய காயமாகிய உடலை
    ஏரகத்து = என் உள்ளத்து
    செட்டியாரே = உள்ளத்து உறைபவரே

    என் விளக்கம் சரியா? உங்கள் விளக்கத்தையும் தந்தால் இரசிப்போம்.
    நன்றி ரசித்தேன்.


    ReplyDelete