Wednesday, January 16, 2019

மனிதனும் எழுத்தும்

மனிதனானவன் மிருகநிலையில் இருந்து வேறுபடுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தது அவனது குரல்வளையில் மாற்றம் ஆகும். அம்மாற்றத்தால் அவனால் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்பு கொண்டு பேசுவதாலேயே அவன் பல காரியங்களைச் சாதிக்க முடிந்தது.

மனித வளர்ச்சி பேசுவதுடன் நின்றுவிடாது தான் கண்டவற்றைக் கைகளைக் கொண்டு  வரைந்தான். அதை இன்றும் நாம் மலைக் குகைகளிலே காணக்கூடியதாக உள்ளது. கையின் உதவி கொண்டு வரையத் தொடங்கிய முயற்சியும் வளர்ச்சியும் மனிதனிடம் எழுத்துருவைத் தோற்றுவிக்க அடிப்படையாக அமைந்தது.

தனக்கு வேண்டியவற்றை நினைவிலே மட்டும் பதித்து வைத்திருந்தால் போதாது; அதனை எழுத்துருவிலும் பதிக்க வேண்டும் என்ற தேவையும் காலப் போக்கில் ஏற்பட்டது. களிமண்ணால் செய்த படிமங்களிலே அவை ஈரமாக இருக்கும் போதே குச்சிகளால் எழுதிக், காயவைத்து அல்லது சூளையில் சுட்டு அவற்றைப் பத்திரப்படுத்தும் பழக்கம் காலஓட்டத்தில் ஏற்பட்டது. இவற்றில் காலத்தால் அழிந்து போகாதவை சில இன்றும் தொல்பொருள் காட்சிச்சாலைகளிலே கப்பாற்றப்பட்டு வருகின்றது. இவை பல ஆராய்ச்சிகளுக்கும் உதவுவனவாகவும் உள்ளன.

இந்த எழுத்தின் உருவும் அவர்கள் எதில் அவற்றை எழுதி வைக்கிரார்கள் என்பதைப் பொறுத்து எழுத்தின் உருவும் வளைந்து கொடுக்கவேண்டி இருந்தது. நாகரிகம் வளர வளர யாவற்றையும் எழுத்துக் கணக்கில் வைக்க வேண்டும் என்ற அத்தியாவசியம் ஏற்பட்டது.

நாகரிக வளர்ச்சி ரொக்கட் வேகத்தில் வளரும் போது வியாபாரம் பெருகுகிறது. வியாபாரத்துக்கு முக்கியமாக வேண்டி இருப்பது கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு வழக்கு. கணக்கினைச் சரியாக வைக்க வேண்டுமானால் யாவற்றையும் வாய்மொழியால் வைத்திருக்க முடியுமா? அதனால் எங்கோ எழுதி வைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அரசுகள் தோன்றி இராச்சிய பரிபாலனம் போன்ற பல விஷயங்களின் மேம்பாடும் எழுத்தறிவை மேலும் வளர்த்தது. இன்று போல் யாவரும் எழுதப்படிக்கத் தெரியவேண்டும் என்ற நிலை அன்று இருக்கவில்லை. படிப்பது என்பது சமுதாயத்தில் ஒருசிலராலேயே முடியுமான காரியமாக இருந்தது. இன்றுபோல என்ன Ballpoint பேனாவும் தாளும் இருந்த காலமா அது?

எமது முன்னோர்கள் குருத்துப் பனை ஓலையை நறுக்கி எடுத்து, அதற்கு மஞ்சள் பூசி, அதிலே எழுதினார்கள். அவற்றை நூல் கொண்டு கட்டி வைத்தனர். (ஓலைக்கு மஞ்சள் பூசுவது அவற்றைப் பூச்சிகள் அரிக்காமல் இருப்பதற்காக) இதை ஏட்டுச் சுவடி என்பார்கள். இதில் எழுத்தாணி கொண்டு தான் எழுத முடியும். இந்த எழுத்தாணியைக் கொண்டு எழுதும் போது க், ட்,ச் போன்ற எழுத்துக்களுக்கு குத்துகள் போட முடியாது. இதற்குக் காரணம் நாம் குத்துகளைப் போடும் போது ஓலையினால் ஆன ஏட்டுச் சுவடியிலே துளை ஏற்பட்டு விடும். இதனால் ஓலையினாலான ஏட்டுச் சுவடியிலே குத்து, முறி எதுவும் காணப்படாது. தமிழ் தெரிந்த யாவரும் ஏட்டுச் சுவடிகளில் இருக்கும் தமிழை படித்து விடலாம் என்றும் சொல்ல முடியாது. குத்து, முறி எதுவும் இல்லாத இந்தத் தமிழ் எழுத்துக்களை வாசிப்பதற்கு ஒரு தனித் திறன் வேண்டும்.

உதாரணத்திற்கு முந்தநாள் என எழுத வேண்டுமானால் ’ந்’ இற்கு இருக்க வேண்டிய குத்து இராது. இதனால் வாசிப்பவர் அச் சொல் என்ன சந்தர்ப்பத்தில் எழுதப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டு அதற்கிசைவாக இச் சொல்லை உச்சரித்துப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக நேரடியாக இதனை வாசிக்க நேரின் அது, ‘ முநதநாள’ என்றே இருக்கும்.

இவைகள் எல்லாம் வசன நடை கைவந்த பின்பான நிலை. இவ் வசன நடை பிற்பட்ட காலத்திலேயே வந்தது. அதற்கும் முன்னாலே எல்லாம் மனனம் பண்ணக்கூடிய செய்யுள், கவிதை உருவிலேயே எல்லாம் இருந்தது. இதைப் பாவிப்பவர்கள் பலரும் தமக்குத் தேவையானவற்றை மனனம் பண்ணி வைத்திருப்பர்.

எனது பாட்டியின் தந்தையார் ஓர் ஆயுள்வேத வைத்தியர். இவரிடம் இந்த ஓலைச் சுவடிகள் - வைத்தியத்திற்கு வேண்டியது - இருந்தது. தந்தையாருக்கு கண்ணிலே வெள்ளை பூத்து வந்தது. அதுதான் இந்த 40,45 வயதுகளில் நாம் வாசிப்பதற்குப் பாவிக்கும் கண்ணாடி போடும் காலகட்டம் அது. அப்பொழுதெல்லாம் இப்பொழுது மாதிரி கண்ணாடி இருந்ததா? அல்லது அப்படி அந்தக் காலத்து கண்ணாடி கொண்டு இந்த ஏடுகளைத் தான் படித்துவிட முடியுமா?

பாவம், கிழவர் மகளின் உதவியை நாடினார். பாட்டியும் அவற்றை வாசித்து மனனம் பண்ணிக் கொண்டார். பிற்காலத்தில் பாட்டியிடம் பலர் வைத்திய உதவி பெற வருவதுண்டு. பாட்டி பாட்டாகவே மூலிகைகளின் பெயரைப் பாடி, குடிநீர் கடையில் வாங்க வேண்டிய பொருட்களைச் சொல்லி விடுவார். இங்கு நாம் கவனிக்க வேண்டியது பாட்டி மனனம் பண்ணி வைத்து பாடியதை. காரணம், ஓலைச்சுவடி பிரதியெடுப்பது என்பது பெரிய கஷ்டமான வேலை. இதனால் பலரும் அன்று மனனம் பண்ணவே கற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு ஏட்டுச் சுவடிகளில் எழுதி வைத்த பாடல்களே இன்றும் எமது வழிபாட்டுக்குரிய தேவாரங்கள். பல நூற்றாண்டு காலமாக இதை வாய்வழியாகவே கேட்டு மனப்பாடம் பண்ணி வருகிறோம் அல்லவா? 63 நாயன்மார்களின் வாழ்க்கை கதையான பெரிய புராணத்தை ஏட்டில் இருந்து பெரிய புராணமாகப் நூலிலே பதிப்பித்தவர் ஈழத்து நல்லூரைச் சேர்ந்த ஆறுமுக நாவலரே!

இன்றெல்லாம் நாம் தமிழரின் நாகரிகச் சின்னம் எனப் பெருமை பேசும் கம்பராமாயணமும் திருக்குறளும்; சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு முதலியனவும் புலவர்கள் பண்டிதர்கள் என்போரிடம் இருந்த ஓலைச் சுவடிகளே. பிற்காலத்தில் பலரால் முயன்று சேர்க்கப்பட்டும்  பதிப்பித்தும் நூலுருப்பெற்றன.

தமிழ் தாத்தா எனப் போற்றப்படும் உ.வே. சாமிநாதைய்யர் நூல் நிலையம் ஒன்று அடையாறில் உண்டு. இதை ஒரு நாள் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இவர் சிலப்பதிகாரத்தை பதிப்பிப்பதற்காக கால்நடையாக தமிழ்நாடு முழுவதும் திரிந்து சேர்த்த ஓலச்சுவடிகளை நான் அங்கு கண்டேன். அவற்றை எல்லாம் அவர் ஒப்பு நோக்கி அவர் எடுத்த கையெழுத்துப் பிரதியும் அங்கு இருந்தது. கையெழுத்துப் பிரதி ஒரு பெரிய புத்தகத்தில் தொட்டு எழுதும் மை கொண்டு G nib ஆல் மணி மணியான எழுத்துருவில் அதனை அவர் பிரதி பண்ணி இருந்தார்.

இவ்வாறு ஒரு தனி மனிதனின் உழைப்பாலேயே இன்று எமக்கு சிலப்பதிகாரம் முதலான தமிழ் இலக்கியச் செல்வங்கள் கிடைத்துள்ளன. இதைப்பார்த்ததும் என்கண்ணில் நீர் மல்கியது.

தமிழ் இலக்கியத்தைப் படிப்பவன் எவனும் இந்த தெய்வத்திற்கு என்றென்றைக்கும் கடமைப்பட்டவனே.

( இக்கட்டுரை 13.4.2005 அன்று ATBC வானொலியில் ‘ பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. )

3 comments:

  1. Vary nice writing

    ReplyDelete
  2. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற வேத வாக்கியத்தின் சிறப்பையும் அவை மனித முற்னேற்றத்திற்கும் மற்றும் நாகரிக மேம்பாட்டிற்கும் அத்திவாரமாக அமைந்ததை இக்கட்டுரை விலாவாரியாக படம் பிடித்துக் காட்டுகின்றது.

    ReplyDelete
  3. நன்றி, திரு. பரமேஸ்வரன்.
    இது என் நெஞ்சைத் தொட்ட விஷயம்.எம்மவருக்கு கல்வியின் பால் இருந்த ஆறாக்காதலே அவர்களை எழுத்தாணியால் எழுத வைத்தது. அவர்களின் வாரிசுகளான நாம் அவர்கள் காப்பாற்றி நமக்களித்ததை படிக்க வேண்டாமா?

    சும்மா நாம் தமிழர் என மார்தட்டுவது கவலைக்குரியதே.

    ReplyDelete