Friday, December 28, 2018

ஒலிம்பிக் - அதன் கலை முகம்

ஒலிம்பிக் விழாவை ஆரம்பித்தவர்கள் கிரேக்கர்கள் என்பது நாம் அறிந்ததே.ஆனால் அன்றய ஒலிம்பிக் விழாக்களில் விளையாட்டுப் போட்டிகளுடன் வேறு பல போட்டிகளும் நடந்தன.

ஒலிம்பிக் விழாக்களிலே கவிஞர்கள் தாங்கள் புனைந்த கவிதைகளை அரங்கேற்றினார்கள். நாடக ஆசிரியர்கள் தாங்கள் இயற்றிய நாடகங்களை மேடை ஏற்றினார்கள். சரித்திர ஆசிரியர்கள் தாங்கள் எழுதிய சரித்திரத்தை படித்துக் காட்டுவார்கள். நாவன்மை படைத்தவர்கள் தங்கள் திறமையைப் புலப்படுத்தும் பொருட்டு அரிய சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்கள்.

கிரேக்கர்களின் வாழ்க்கையிலே கவிதையும் இசையும் இரு கண்களாக விளங்கின. ஊது குழலும் யாழும் இசைக்கருவிகளாக இருந்தன. கோஷ்டி கோஷ்டியாக சேர்ந்து பாட்டிசைப்பார்கள். சங்கீதத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும் இங்கே இருந்தார்கள்.

கிரேக்கர்கள் நாடகத் துறையிலே மிக உன்னத நிலையில் இருந்தவர்கள். அங்கு மூன்று வகை நாடகங்கள் வழக்கில் இருந்தன. Cartoon நாடகங்கள் அவற்றில் ஒன்று. அரசியலையும் சமூக சீர்கேடுகளையும் கேலியாக Cartoon மூலமாக அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். இரண்டாவது நகைச்சுவை நாடகங்கள். மூன்றாவது அவலச் சுவை நிறைந்த நாடகங்கள். இவை மிகப்பிரசித்தி பெற்றவை.

நாடகக் கலைக்காகப் போட்டிகள் நடந்தன. இத்தகைய போட்டிகளை நகர ஆட்சியாளர்களே நடாத்தினார்கள். நாடகப் போட்டியில் கலந்து கொள்ளுமாறு கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப் படும். தயாரிக்கப் படும் நாடகப் பிரதி போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப் படும். இத்தகைய போட்டிகளுக்குத் தீர்ப்பு வழங்குவதற்கும் பத்து நடுவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவல நாடகங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓர் ஆடு பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நாடகங்களைப் பார்ப்பதற்கு பெருந் திரளாக மக்கள் கூடினார்கள். ஆரம்ப காலத்தில் இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. நல்ல இடம் பிடிப்பதற்காக நாடகத்திற்கு முதல் நாளே வந்து இடம் பிடித்துக் கொள்ளுவார்களாம். அது மட்டுமல்ல அன்னியரும் கிரேக்கர் அல்லாதவரும் கூட இந் நாடகங்களைப் பார்ப்பதற்கு வந்து கூடினார்களாம். அதனால் நுழைவுக்கென பின்னர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஏழைகளுக்கான கட்டணத்தை அரசே கொடுத்துதவியது. இதனால் சகல குடி மக்களுக்கும் நாடகம் பார்க்கும் உரிமை வழங்கப்பட்டது. அது மட்டுமா? நாடகம் பார்ப்பதற்கு கைதிகளும் இட்டுச் செல்லப்பட்டனர். அதனால் போலும் இன்றும் சிறைச்சாலைகளில் TV பார்க்கும் வசதி உண்டு.

எமது மரபிலும் நாடக மேடையே அறிவூட்டும் கல்விக்கூடம் என்ற எண்ணம் இருந்தது. அந்தச் சிந்தனையைக் கிரேக்கரிடமும் காண்கிறோம்.  தமிழ் மக்களுக்குச் சிலப்பதிகாரம் உட்பட அரிய பெரிய காப்பியங்களைத் தேடி நூலுருவில் பதிப்பித்து தந்த தமிழ் தாத்தா. உ.வே. சாமிநாதைய்யர் அவர்கள் சொல்லுவதைக் கேழுங்கள்.

”புராதன கிரேக்கர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், அனுஷ்டித்து வந்த பழக்க வழக்கங்கள் முதலியவற்றை அறியும் போது அவர்கள் எல்லோரும் நமது மூதாதையரிடம் இருந்து பிரிந்து சென்ற ஒரு கிளையினர் தானோ என என நினைக்கத் வேண்டி இருக்கிறது. நமது பாரத நாட்டுப் பண்புகள் பலவும் அவர்களுடய வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அவர்களை அறிய அறிய அவர்களிடத்தில் நம்மை அறியாத ஒரு வாஞ்சை உண்டாகிறது. அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்த சுக துக்கங்கள், யுத்தங்களில் அடைந்த வெற்றி தோல்விகள் யாவும் எமது இதயத்தைத் தொட்டு விடுகின்றன.”

( இக்கட்டுரை ATBC வானொலியில் 23.3.2006 அன்று ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)

2 comments:

  1. ஒலிம்பிக் போட்டிகளில் தமது நாட்டின் பிரதிநிதிகளாக வீர / வீராங்கனைகள் பங்கு பெறுவது அந்தந்த நாடுகளுக்கு பெருமை தேடித் தருகின்றது.

    அப்போட்டிகளில் சாதனை படைத்து முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் மிளிர்வது சாதனையாளர்களின் திறமையைப் பொறுத்தது.

    It is the greatest honour for the participants in the Olympics, is to represent their countries.

    Winning a prize in the Olympic competitions need not necessarily be the prime objective.


    ReplyDelete
  2. ஒலிம்பிக் போட்டியின் உன்னத நோக்கம் நாடுகளுக்கிடையான நட்புறவே.அதன் பின்பே போட்டியும் வெல்லுதலும். துர் அதிஷ்டவசமாக விளையாட்டுகள் விலைமட்டமாகி விளையாட்டின் இன்பம் மறைந்து விட்டது.50 களில் விம்பிள்டன் ஆட்டக்காரரே 15 டொலர் கட்டி விளையாடினராம். இப்போது ஆட்டக்காரர் பந்தயக் குதிரை போல பயிற்சி பெறுகின்றனர். பணம், பரிசுத்தொகை என விளையாட்டின் இன்பம் இப்போது திசைமாறி விட்டது. ஒலிம்பிக்கில் பணம் கிடையாது. ஆனால் நாடுகள் வெல்வதற்காக வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சி பயங்கரமானது.

    இலங்கை வீரர் டங்கன் ஒலிம்பிக்கில் 3வது இடத்தை 50 களில் பெற்றார்.இவர் 2ம் இடத்தைத் தவற விடக் காரணம் பின்னால் வருபவர் எவ்வளவு தொலைவில் வருகிறார் எனத் திரும்பிப் பார்த்துக் கவனத்தைத் தவற விட்டது.

    இப்படியும் ஒலிம்பிக் இருந்தது.

    ReplyDelete