Thursday, December 27, 2018

நாதஸ்வரமும் சங்கீதமும்


நாதஸ்வர இசை என்பது நம் எல்லோரையும் இன்றும் கவர்வது. இந்த வாத்தியத்தின் மகிமை என்னவென்றால் அது கோயிலிலோ அல்லது கல்யாணத்திலோ வாசிக்கப்பட்டால் சுமார் ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்கு இந்த இசையைக் கேட்டு மகிழலாம்.

இந்துக் கோயில்களிலே இதை வாசிப்பது வழமை.  ஆனால் இந்த வாத்தியத்தை இசைப்பதிலே மன்னராக விளங்கியவர் ஷேக். சின்ன மெளலானா என்ற முஸ்லீம். இவர் மட்டுமல்ல, தெலுங்கு தேசத்திலே பல முஸ்லீம் குடும்பங்கள் இதை வாசிப்பதுண்டு. இவரின் வாசிப்பைப் பலர் கொழும்பு வேல் விழாவிலே கேட்டிருக்கலாம்.

நாதஸ்வரத்தை வாசிப்பதிலே தன்னிகரில்லாது திகழ்ந்த இன்னொருவர் திருவாவடுதுறை.இராஜரட்னம் பிள்ளை அவர்கள். அந்த நாளிலே திரு இராஜரட்னம் பிள்ள அவர்கள் கல்யாணத்துக்கு வாசிக்க வருகிறார் என்றால் திருமண ஊர்வலத்திலே அயல் ஊர் மக்கள் எல்லாம் கூடி வந்து கச்சேரியை இரசிப்பார்களாம். ஊர்வலத்திலே ஒளி ஊட்டுவதற்கு கூலி ஆட்கள் தலையிலே Gas Light ஐத் தூக்கிச் செல்வார்களாம். இவர்களை ‘மண்டை விளக்கு’ என அழைப்பார்கள்.

All India Radio விலே திரு. இராஜ ரட்னத்தைப் பேட்டி எடுத்தவர், ‘ பிள்ளைவாழ், உங்கள் மனதில் நிறைந்திருக்கும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்ன என்று கேட்ட போது அவர்,  தான் ஊர்வலத்திலே தோடி இராகத்தை நுணுக்கமாக வாசித்த போது, ஒரு மண்டை விளக்கு அதைப் புரிந்து கொண்டு ‘சபாஷ்’ போட்டதைக் கூறினார்.

செம்பை வைத்தியநாத பகவதர் சென்னையிலே வசித்த காலத்தில் இவர் பாடுவதை வீட்டு ஜன்னல் வழியாக இருந்து ஒரு றிக்‌ஷாக் காரன் கேட்டு மகிழ்வது வழக்கம். ஒரு நாள் பாகவதர் அவனை அழைத்து, ‘சங்கீதம் கற்றுத் தரட்டாப்பா’ என்று கேட்டார்.அவரது இசையைப் போன்று அவரது மனமும் மிக இளகியது...

எனது சில நண்பர்கள் தாங்கள் ஞானசூனியங்கள்; கர்நாடக இசை தெரியாது; இரசிக்க முடியாது என்பார்கள். எல்லாம் மனம் தான். நாமே நமக்குப் போடும் தடைக்கல் இது. ரிக்‌ஷாக் காரன் சங்கீதம் படித்தா இரசித்தான்? அல்லது மண்டை விளக்கு புரிந்தா சபாஷ் சொன்னான்? இசை எம்மை இசைய வைக்கும்;  இசைக்கு மொழி கிடையாது. இந்த ஞானம் ஏற வேண்டும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் FM Channel ல் English Classical Music கேட்பார். இவர் ஒரு கர்நாடக சங்கீத இரசிகரும் கூட. மதுரை மணியும் ஒரு Western Music இரசிகர். அவர் அமைத்த Western Music Tune இன்றும் பல வீணை மற்றும் வயலின் கற்றுக் கொள்ளும் மாணவர்களால் வாசிக்கப் படுகிறது. கடந்த வருடம் சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற சங்கர நாராயணனும் ஒரு Western Classical Music இரசிகர்.

நான்கு தடவைகள் தொடர்ந்து மலையாளப் படங்களுக்கு இசை அமைத்து Best Music Director Award பெற்ற தமிழரான எம்.பி. ஸ்ரீநிவாசன் கர்நாடக சங்கீத இராகங்களிலே 30 -35 பேரை ஒரே நேரம் பாட வைத்து Western பாணியிலேயே Ogastral effect ஐக் கொண்டுவந்தவர். அதன் மூலமாக கர்நாடக இசைக்கு ஒரு திருப்பு முனையைக் கொடுத்தவர். இவர் வளர்த்த நாய்க்கு பிரபல Opera Singer ODATA வின் பெயரை வைத்திருந்தார் என்பது ஒரு சுவாரிசமான செய்தி.

அது மட்டுமா? இன்று மேற்கத்தயத்தவரும் கர்நாடக இசையை இரசித்து வருகிறார்கள். சென்னையில் நடக்கும் மார்கழி விழாவில் சங்கீதக் கச்சேரி கேட்கவும் மேற்கத்தயவர்கள் கூட்டம் வருகிறது. எமது சாப்பாட்டை இரசிப்பதுடன் இசை நாட்டியத்தையும் உலகளாவிய ரீதியில் அவர்கள் இரசிக்கத் தொடங்கி விட்டார்கள். நாம் ஏன் பின் நிற்க வேண்டும்?

இசை என்பது காதுக்கு விருந்தே தவிர வேறு எதுவும் கிடையாது. அதனால் முதலிலே எமக்கு இந்தக் கர்நாடக இசை புரியாது என்ற சிந்தனையை மாற்றினால் தானாக இசையை இரசிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

(ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சியில் ......... அன்று ஒலிபரப்பானது)

No comments:

Post a Comment