Monday, February 04, 2019

பிள்ளை வளர்ப்பும் விளையாட்டுப் பொருட்களும்

இன்று இரு பெற்றோரும் தொழில் பார்க்கும் மத்தியதர குடும்பங்களே பெருகி வருகிறது. கணவன் என்பவன் வருவாய் தேடி உழைப்பவன். இல்லாள் அல்லது இல்லத்தரசி அவன் உழைத்துக் கொண்டுவரும் சம்பாத்தியத்தில் வீட்டை நிர்வகிப்பவள்; குடும்பத்தைப் பராமரிப்பவள் என்பதெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டது. இன்று இல்லாள் ( இல்லத்தை ஆள்பவள் ) என்ற பதம் அர்த்தமற்றதாகி விட்டது.

பெற்றோர் இருவரும் சம்பாதிக்கும் குடும்பங்களில் பிள்ளைகளும் அதற்கேற்ப ஒரு புதிய சூழலில் வளர்கிறார்கள். ஒருவர் உழைக்கும் குடும்பத்தில் ஓரளவு பணப்பற்றாக்குறை இருப்பதற்கு இடமுண்டு. இன்னும் சரியாகச் சொல்வதானால் அதிகப்படியான ஆடம்பரங்களுக்குப் பற்றாமை என்பதே சரியானது. இதனால் ஒருவர் சம்பாதிக்கும் குடும்பங்கள் ஆடம்பரமற்ற வாழ்வை வாழ்ந்து வந்தனர். பிள்ளைகளின் எண்ணிக்கையும் ஒன்றோ இரண்டாகவோ தான் இருந்தது. இதனால் பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய இவர்களிடம் பணம் போதுமாக இருந்தது.

இன்றய தலைமுறைச் சிறார்கள் புதிய வசதிகளை அனுபவிக்கும் ஒரு புதிய தலைமுறையாக உருவாகி வருகிறார்கள். இந்தப் புதியத் தலைமுறைப் பெற்றோரிடமும் பணம் இருப்பதால் வேலை விட்டு வந்து பிள்ளைகளின் நன்மை கருதி அவர்களை வெவ்வேறு பட்ட வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது வழமையாகி விட்டது. சில 8, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் சங்கீதம், உதைப்பந்தாட்டம், கூடைப்பந்து, நீச்சல், பரதநாட்டியம் என 4 அல்லது 5 வேறுபட்ட கலைகளைக் கற்று வருகிறார்கள். எனினும் இவைகள் அனைத்திலும் அவர்கள் தேர்ச்சிபெற்றவர்களாக வருவார்களா என்பது சந்தேகமே.

தாய் என்பவளைப் பொறுத்த வரையில் தான் போதியளவு நேரத்தை பிள்ளைகளுடன் செலவு செய்ய முடியாமையால் அவளுக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையிலே தனது வருவாயின் பெரும் பகுதியைத் தன் வாரிசுகளுக்காகச் செலவு செய்வதில் அவள் திருப்தி காண்கிறாள். மறுபக்கத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சகல வசதிகளையும் கொடுப்பதால் அவர்களின் வருங்காலம் நல்லாக அமையும் என்றும்  அவர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறத்தில் இன்று சிறாரை மையமாக வைத்து பல தொழில்களும் இயங்கி வருகின்றன. முன்பு எப்பொழுதும் கண முடியாத அளவுக்கு இந்தத்துறை நன்கு வளர்ந்து வருகிறது. முக்கியமாகப் பிறந்த தினக் கொண்டாட்டங்கள் பல நூறு டொலர்கள் செலவில் நடைபெறுகிறது. இதை ஒழுங்கு செய்வதற்கென்றே பல ஸ்தாபனங்களும் இன்று உருவாகி வருகின்றன. பல குடும்பங்களிலே இன்று உற்றார் உரவினருக்கு ஒரு விதமான கொண்டாட்ட முறை; தமது தோழ தோழியருக்கு வேறு விதமான கொண்டாட்ட முறை என்றெல்லாம் அது விரிவு பெற்றுச் செல்கிறது. இவை எல்லாம் சந்தோஷம் கருதி மட்டும் நடைபெறுபவை அல்ல. போட்டி பொறாமைகள் மற்றும் ஒப்பீடுகளும் இவற்றுள்ளே கலந்துள்ளன.

அறியாப்பருவத்தில் இருக்கும் தமது வாரிசுகளுக்கு நல்லறிவு புகட்ட வேண்டிய பெற்றோர் அதை மறந்து இந்தச் சிக்கலில் தம்மையும் இணைத்துக் கொள்ளுகிறார்கள்.பெற்றோர் தமது வாரிசுகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்களை வாங்குகிறார்கள். சில சமயம் பெற்றோர் காட்டும் ஆர்வம் தமக்காக அவற்றை வாங்குகிறார்களா அல்லது பிள்ளைகளுக்காகவா என்று சந்தேகப்பட வேண்டி உள்ளது என்கிறார் ஒரு வியாபாரி.

சிறுவர் விளையாட்டுப் பொருட்களைத் தாமாகவே கற்பனை செய்து விளையாடுவது மூளை விருத்திக்கு அத்தியாவசியமாகும். ஒரு அட்டைப் பெட்டியே குழந்தையின் உள்ளத்தில் கார் ஆக மாறுகிறது; அதே பெட்டி பின்னர் பிளேன் ஆக மேலே பறக்கவும் கீழே இறங்கவும் செய்கிறது. அப் பிள்ளையின் விளையாட்டில் கற்பனையும் சிந்தனைகளும் இவ்வாறு வளர்கிறது. ஒன்றைப் பார்த்து அதையே கற்பனையாகப் பாவனை செய்வது சிறுவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைக் கல்வி பற்றிய ஆய்வுகளும் மனோதத்துவ நிபுணர்களும் இதைப் பலவாறாக வற்புறுத்துகிறார்கள். ஆனால் பெற்றோர் அதை சட்டை செய்வது இல்லை என்றே தோன்றுகிறது.

விளையாட்டுப் பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இவை குழந்தைகளின் மனோ வளர்ச்சிக்கு அத்தியாவசியமா என ஆராய்வதற்கு எந்த ஒரு அமைப்பும் கிடையாது. விளம்பரதாரரும் வியாபாரிகளும் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து விளம்பரப்படுத்தி அவர்களது வியாபாரம் மட்டும் அபாரமாக நடக்கிறது.

இன்று பெற்றோராக இருக்கும் பலரும் பெரும்பாலும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தவர்கள். சிறுவர்களுக்குத் தேவை எது தேவையற்றது எது என நிர்ணயிக்கும் உரிமை பெற்றோரதாகவே அன்று இருந்தது. இன்று நிலைமை மாறி விட்டது. பல வீடுகளில் தமக்கு எந்த வகைக் கார் வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் அல்ல; பிள்ளைகளே நிர்ணயிக்கிறார்களாம். இதை உணர்ந்த விற்பனையாளர்களும் விளம்பர தாரர்களும் சிறுவர்களைக் கவரக்கூடியதாகக் கார் விளம்பரங்களைச் செய்கிறார்களாம். இந்த விளம்பரங்கள் எந்த நம்பிக்கையில் செய்யப்படுகிறது தெரியுமா? பிள்ளைகளின் தொந்தரவு தாங்காமல் பெற்றோர் அந்தக் காரை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் தானாம்.

அது மட்டுமல்ல, வீடு எங்கு வாங்குவது; எப்படியான வீடு வேண்டும் என்பதெல்லாம் பிள்ளைகளால் நிர்ணயிக்கப்படுகிறதாம். இதற்குப் பெற்றோர் தலையசைக்கிறார்கள். அனுபவப்பட்ட மூத்தோர் என்பதற்கு இங்கு அர்த்தமே கிடையாது போலும்!

இத்தனை வசதியும் கொண்ட இளம் வாரிசுகள் சந்தோஷத்தில் மிதக்கிறார்களா? அது தான் இல்லை என்கிறார் Prof. Paula. Barrett.  முந்தய தலைமுறையினருடம் ஒப்பிடும் போது இன்றய தலைமுறைச் சிறார்கள் பல மன உழைச்சலுக்கும் ஆளாகிறார்களாம்.

இதனால் நாம் எமது இளம் வாரிசுகளை வளர்ப்பதில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். அன்பின் நிமித்தம் அவர்களுக்கு வாரி வழங்குவது அவர்களின் நன்மைக்கா? தீமைக்கா? முடிவு செய்ய வேண்டியது பெற்றோரே!

( இக் கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சிக்காக ............அன்று ஒலிபரப்பாகியது.)

2 comments:

  1. கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களின் கட்டுரையும் அதற்குப் பொருத்தமான படமும் மிகவும் அருமை. நாகரிக வளர்ச்சியும் தொழில் நுட்ப வளர்ச்சியும் எமக்கு எத்தனையோ வசதிகளைப் பெற்றுத் தந்தாலும் எமது குழந்தைகள் எத்தனையோ சந்தோசங்களை இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மிகவும் அழகாக தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

    ReplyDelete
  2. நன்றி கெளரி.
    இன்றய பெற்றோர் இதை உணர்ந்தால் போதும்.

    ReplyDelete