எனது மனம் எம்மவரை நோக்கித் திரும்பியது. அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின் எம்மில் பலருக்கும் திருமண பொன் விழா நடக்கத் தான் செய்கிறது. பெற்றோரைக் கெளரவிக்கும் பொருட்டு பிள்ளைகள் இதை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். பலரும் வந்து வாழ்த்தி உணவுண்டு களித்துப் போகிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியத் தம்பதிகளைப் போல் திடகாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் இந்த வயதிலும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்?
இவை ஏன்? எமது சிந்தனையின் வேறுபாடா? கலாசார வேறுபாடா? பண்பாடா? ஆம்; அத்தனையும் காரணம் எனக் கூறலாம்.
எமது பாரம்பரியம் பெற்றோரானவர்கள் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதுடன் நின்றுவிடுவதல்ல; தொடர்ந்தும் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு பையனோ பெண்ணோ 18 வயதை அடைந்ததும் அவர்கள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள் தம்மைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அதுவரை அவர்களைச் சீராகக் கவனிப்பது தான் கடமை என்பது மேற்கத்தியச் சிந்தனை. அதற்குப் பின் பிள்ளைகள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்பது மேலைத்தேயப் பண்பாட்டு நியதி. ஆனால் நம் பண்பாட்டிலோ நம் பையனோ பெண்ணோ எம்முடன் தான் வாழ வேண்டும் என அழுங்குப் பிடிவாதம் பிடிக்கிறோம். அவர்களின் சுதந்திரத்தில் தாராளமாகத் தலையிடுகிறோம். இதுவே எமது முழுநேரக் கவனமாகி, எம்மைக் கவனிக்க மறுக்கிறோம். நாம் தனி மனிதர். நாமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதெல்லாம் நம் சிந்தனையில் இருந்து அறவே அகன்று விடுகிறது. பிள்ளைகளின் வாழ்வில் எமது சந்தோஷத்தை தொலைத்து விடுகிறோம்; அல்லது மறந்து விடுகிறோம். பெண்னைப் பெற்று விட்டால் அவளுக்குத் திருமணம், சீதனம் என்றெல்லாம் உழைத்து வயோதிப காலத்தில் தமது சேமிப்பையும் பல பெற்ரோர்கள் இழந்து விடுகிறார்கள். இவை யாவும் எமக்கு வேண்டிய பண்பாடுகளா?
பெற்றோரானவர்கள் மெழுகுதிரி மாதிரி எரிந்து ஒளியைக் கொடுத்து தன்னையே அழிப்பது போல தமது வாரிசுகளுக்காக வாழ்ந்து மாள வேண்டியவர் என்பது எமது பண்பாடு. எமக்குக் கிடைத்த அறிவுரை அத்தனையும் பிறருக்காகத் தியாகம் பண்ணுவது வாழ்க்கையில் சிறந்த அம்சம் என்பதே. தனக்காக வாழ்வது மிகத் தன்னலமான காரியமாகக் கருதப்படுகிறது.
பண்டைய நூல்களும் இல்லறத்தின் பின் துறவறம் பற்றியே போதிக்கின்றது. இல்லற இன்ப வாழ்வு முடிந்ததும் உலக இன்பங்களை விடுத்து மரணத்தின் பின் வரும் மோட்சத்தை வேண்டி இறை பிரார்த்தனையில் காலத்தைக் கழிக்க வேண்டும் என்பது இந்தியப் பண்பாட்டு நியதி. எம்மவர்கள் துறவறம் போகிறார்களோ இல்லையோ வாழ்க்கை இன்பத்தைத் துறக்கத் தயாராக இருக்கிறார்கள்.
விஷயம் தெரிந்ததும் புதிதாக வந்த வெள்ளைக்கார மருமகள் மற்றவர்களுக்கு மாறாக அவர்களைக் கட்டி அணைத்துத் தனது சந்தோஷத்தைத் தெரிவிக்கிறாள். இந்த வயதில் இவர்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதை அவள் ஒரு சந்தோஷமான விஷயமாகக் கருதுகிறாள். மாமியாரை முற்றுமுழுதாகக் கவனிக்கும் பொறுப்பை தானே ஏற்றுக் கொள்ளவும் செய்கிறாள்.
இந்தியர்களின் சிந்தனைப் பண்பாட்டு மாறுபாட்டை எழுத்தாளர் ஜெயக்காந்தன் அழகாகச் சித்தரித்து எது சிறந்தது என்ற தீர்ப்பை எம்மிடமே விட்டு விடுகிறார்.
( இக் கட்டுரை ATBC வானொலியில் ’பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சிக்காக 27.9.2005 இல் ஒலிபரப்பானது. )
No comments:
Post a Comment